உணவுக்காக நத்தை வாங்கியவருக்கு பேரதிஸ்டம்; மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய பெண்
வீட்டில் சமைப்பதற்காக பெண் ஒருவர் கடல் நத்தையை வாங்கிச் சென்றுள்ள நிலையில், அதனை சுத்தம் செய்த போது,முத்து கிடைத்ததில் அவர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார். தாய்லாந்து நாட்டின் சட்டுன் (Satun) என்னும் மாகாணத்தைச் சேர்ந்தவர் Kodchakorn Tantiwiwatkul. அவர் , வீட்டில் சமைப்பதற்காக, உள்ளூர் மீன் சந்தையில் இருந்து நத்தைகளை சுமார் 160 ரூபாய்க்கு வாங்கிச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்று, அதனை சுத்தப்படுத்திய போது, அதில் ஒரு நத்தைக்குள் மஞ்சள் நிற கல் போன்ற பொருள் ஒன்று இருப்பதை அவர் கண்டுள்ளார். முதலில், அதனை ஒரு சாதாரண கல் என நினைத்த அவர், அதன் பிறகு தான் 6 கிராம் எடை கொண்ட அந்த கல், ஆரஞ்சு மெலோ முத்து (Melo Pearl) என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், அதன் விலை மதிப்பு அதிகமாக இருக்கும் என்பதையும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர்.
மேலும், அவர்களுக்கு இந்த விலை மதிப்புமிக்க முத்து கிடைத்தது வெளியே தெரிந்தால், அந்த நத்தையை விற்பனை செய்த வியாபாரி தகராறு செய்து விடுவார் என நினைத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் வெளியே யாரிடமும் சொல்லாமல், ரகசியம் காத்துள்ளனர்.
இந்நிலையில் , அவர்களது குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலை காரணமாக, அந்த மெலோ முத்தை விற்க முடிவு செய்துள்ளனர். பொதுவாக, இந்த மெலோ முத்து வகைகளுக்கு கோடிகள் வரை மதிப்பு என கூறப்படும் நிலையில், இதற்கு முன்பு இதே போல கிடைத்த மெலோ முத்துக்களை பலர் சிறந்த விலைக்கு விற்றுள்ளதையும், Kodchakorn ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டுள்ளார்.
அவரின் தந்தை, விபத்து ஒன்றில் சமீபத்தில் சிக்கியுள்ளார். அதே போல, அவரது தாயாரும் புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதால், தனது பெற்றோர்களின் மருத்துவ செலவுகளுக்காக, இந்த முத்தை விற்க Kodchakorn முடிவு செய்துள்ளாராம்.