தபால் திருட்டில் கொத்தாக சிக்கிய 16 பேர்: பகீர் பின்னணி
பீல் பிராந்தியத்தில் தபால் திருட்டு கும்பல் தொடர்பில் ஒரு வாரங்கள் நீடித்த விசாரணையைத் தொடர்ந்து கொத்தாக 16 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் மேலும் பல கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கனடா தபால் துறையுடன் இணைந்து கடந்த மாதம் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.
பிராம்ப்டன் குடியிருப்பாளர்கள் சுமார் 100 பேர்களிடம் இருந்து ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தபால் திருட்டு தொடர்பில் புகார்கள் குவிந்த நிலையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தபால்களை கனடா அஞ்சல் பெட்டியில் இருந்தும், அல்லது குடியிருப்புக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் பெட்டியில் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் திருடியுள்ளனர்.
இவர்களின் முதன்மை குறிக்கோள், காசோலைகள், வங்கி கடன் அட்டைகள், அடையாள ஆவணங்கள் எனவும், திருடப்பட்ட காசோலைகளை மிக நுணுக்கமாக முறைகேடு செய்து வங்கிகளில் சமர்ப்பித்து ஆதாயம் தேடியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மே 19 முதல் கைது நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளனர். பிராம்ப்டனில் இரண்டு குடியிருப்புகளை விசாரணையின் ஒருபகுதியாக முறைப்படி சோதனையிட்டுள்ளனர்.
அங்கிருந்து நூற்றுக்கணக்கான தலால் உறைகளும் திருடப்பட்ட அல்லது திருத்தப்பட்ட காசோலைகளும் கண்டெடுத்துள்ளனர். மட்டுமின்றி, இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் கருவிகளும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இதுவரை 16 பேர்கள் கைதாகியுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 140 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை இவர்கள் எதிர்கொள்ள உள்ளனர்.