எல் சல்வாடோரில் மிருகங்களைப்போல் வீதியில் இழுத்துசெல்லப்பட்ட நபர்கள்!
எல் சல்வாடோரில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றால் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மேற்படி குழுக்களை அடையாளம் கண்டு கைதுசெய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டு ஊடகவியலாளர்கள் முன்பாக அணிவகுத்துச் செல்லப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் நேற்று (01.07.2022) வெளியாகியுள்ளன.
மேற்படி கைதுசெய்யப்பட்டவர்கள் எல் சல்வாடோரில் செயற்படும் குற்றச்செயல்களில் ஈடுபடும் 3 பிரதான குழுக்களில் ஒன்றான பாரியோ 18 சுரெனொஸின் உறுப்பினர்கள் என நம்பப்படுகிறது.
அதேசமயம் மத்திய அமெரிக்காவிலுள்ள மிகவும் சிறிய நாடான எல் சல்வாடோர் உலகில் படுகொலைகள் அதிகளவில் இடம்பெறும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மேற்படி குழுவினரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பெருந்தொகையான ஆயுதம் ஏந்திய பொலிஸார் சாந்த அனா பிராந்தியத்திற்கு அயலிலுள்ள லா றியலிடாட்டில் வைத்து அந்தக் குழுவினரை மடக்கிப் பிடித்துக் கைதுசெய்தனர்.
அவர்கள் கைவிலங்கிடப்பட்டு அழுததுச் செல்லப்பட்டு அந்தப் பிராந்தியத்திலுள்ள அழுக்கான வீதியில் மண்டியிட்ட நிலையில் ஊடகவியலாளர்கள் முன்பாக அமர வைக்கப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் இளவயதினர் ஒருவரும் ஊடகவியலாளர்களின் புகைப்படக்கருவிகளுக்கு தமது முகத்தை மறைக்கும் முகமாக தலை குனிந்த நிலையில் காணப்பட்டனர்.
அதேவேளை எல் சல்வாடோர் ஜனாதிபதி நயிப் புகெலி குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்தமைக்கு மறுநாள் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.