ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டம்
அவுஸ்திரேலியாவில் ஓரடங்கிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் இடம்பெற்று வருகிறது.
அவுஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களான சிட்னி, தலைநகர் கான்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது.
இதனால், அந்த நகரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. சிட்னியில் 2 மாதங்களும், கான்பெர்ரா மற்றும் மெல்போர்ன் ஆகிய நகரங்களில் 1 மாதமும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு ஊரடங்கு அமல்படுத்துவதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியாவில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. பல்வேறு நகரங்களில் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஒரு சில நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் 7 பொலிஸார் காயமடைந்தனர். நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மொத்தம் 250 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பலருக்கு கொரோனா விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டது.