லண்டனில் பத்து லட்சம் பவுண்ட்களை உரிமைகோராத நபர்; இன்று நள்ளிரவுடன் காலாவதி; இணையத்தளவாசிகள் அங்கலாய்ப்பு
லண்டனில் லொட்டரி பரிசுத் தொகையான பத்து லட்சம் பவுண்ட்களை அதற்கு உரிமையான நபர் உரிமை கோராமல் இருப்பதால், இது இன்று நள்ளிரவோடு காலாவதியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் தெற்கு லண்டனின் Lewisham-ல் இருக்கும் கடை ஒன்றில் வாங்கப்பட்ட VSHS38986 எண் கொண்ட லொட்டரிக்கு பரிசுத் தொகையான 1,000,000(இலங்கை மதிப்பில் 27 கோடி ரூபாய்க்கு மேல்) பவுண்ட் விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் , அதற்கான பரிசுத் தொகை வாங்கப்படாததால், அதற்கான காலக்கெடு ஆறு மாதம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னரும் உரியவர் வந்து வாங்காத காரணத்தினால், கடந்த புதன் கிழமை மீண்டும் ஜாக்பாட் லொட்டரிக்கான பரிசுத் தொகை, அதாவது யூரோ மில்லியன் லொட்டரி டிக்கெட்டை அப்போது வாங்கியவர்கள் சரிபார்த்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது வரை அதை வாங்க வராத காரணத்தினால், கொடுக்கப்பட்ட காலக்கெடு இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது. இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், அந்த நபர் ஒரு மில்லியன் பவுண்ட்டிற்கான பரிசுத் தொகையை இழந்துவிட்டார். இதனால் இந்த தொகை ஏதேனும் நிதியுதவி திட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், லொட்டரி டிக்கெட் வாங்குபவர்கள் National-lottery.co.uk என்ற இணையத்திலோ அல்லது தேசிய லொட்டரி ஆப்பை பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஆன்லைனில் தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகளை பரிசோதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியைக் கண்ட இணையவாசிகள், பலரும் இப்படியா தேடி வந்த அதிர்ஷ்டத்தை கைவிடுவார்கள் என அங்கலாய்க்கின்றனர்.