பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன மீனவர் உயிருடன் மீட்பு
பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போன பெருவியன் மீனவர் பத்திரமாக மீடக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர் 95 நாட்கள் பின்னர் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
61 வயதுடைய நபர்
கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் புறப்பட்டார்.
இரண்டு வார திட்டமிடப்பட்ட பயணத்திற்கான உணவை அவர் கொண்டு சென்ற நிலையில் , பத்து நாட்களுக்குப் பின்னர் புயல் காற்று அவரது படகை திசைதிருப்பியது.
இதனால், அவர் பசுபிக் பெருங்கடலில் தத்தளித்ததுடன், காணாமல் போனார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தேடுதலைத் தொடங்கியபோதும் பெருவின் கடல்சார் ரோந்துப் படையினரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஈக்வடார் ரோந்துக் கப்பலான டான் எஃப், அவரை கடற்கரையிலிருந்து 1,094 கிமீ (680 மைல்) தொலைவில், நீரிழப்பு மற்றும் ஆபத்தான நிலையில் கண்டுபிடித்து மீட்டது.
மாக்சிமோ தனது படகில் மழைநீரை நிரப்பி அருந்தியும், கிடைத்ததைச் சாப்பிட்டும் உயிர் பிழைத்ததாகவும் கூறினார்.
அவரது கடைசி 15 நாட்கள் உணவு இல்லாமல் கழிந்ததாகவும் படகில் தத்தளித்த போது, தனது இரண்டு மாத பேத்தி உட்பட தனது குடும்பத்தினரை நினைத்தது வருந்தியதாகவும் அவர் கூறினார்.
மீட்பின் பின்னர் மாக்சிமோ, பெருவியன் தலைநகர் லிமாவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைகளுக்காக பைட்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் நாடு திரும்பியதாகவும் கூறப்படுகின்றது.