காலியான வீடுகளுக்கும் இனி வரி: ரொறன்ரோ நகர சபை ஒப்புதல்
காலியாக உள்ள குடியிருப்புகளுக்கும் இனி மேல் வரி வசூலிக்கும் முடிவுக்கு ரொறன்ரோ நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.
குறித்த வரி வசூலிக்கும் திட்டமானது அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் என நகர சபை அறிவித்துள்ளது. இது கண்டிப்பாக வருவாய் திரட்டும் முயற்சி அல்ல என்பதை சுட்டிக்காட்டியுள்ள நகர சபை நிர்வாகம்,
வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை காலியாக வைத்திருக்காமல், தேவையானவர்களுக்கு குடியிருக்கும் வாய்ப்பை வழங்க ஊக்குவிக்கும் ஒரு முயற்சியே என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த புதிய முயற்சியானது 2022 ஜனவரி 1ம் திகதி சனிக்கிழமை முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலியாக உள்ள வீடுகளுக்கான வரி 2023 ஆண்டின் தொடக்கத்தில் முதல் முறையாக செலுத்தப்பட வேண்டும்.
முந்தைய ஆண்டில் அந்த குடியிருப்பானது எத்தனை மாதங்கள் காலியாக இருந்தது என்பதின் அடிப்படையில் வரி வசூலிக்கப்படும். அதாவது முந்தைய ஆண்டு 6 மாதங்களுக்கு மேல் குறிப்பிட்ட குடியிருப்பானது காலியாக இருந்தால், வீட்டின் உரிமையாளர் வரி செலுத்த நேரிடும்.
இருப்பினும், புதுப்பித்தல் முன்னெடுக்கப்படும் வீடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும். மேலும் வீட்டின் உரிமையாளர் மருத்துவ சிகிச்சையில் இருந்தால், அல்லது மரணமடைந்திருந்தால் விலக்கு அளிக்கப்படும்.
குடியிருப்பின் தற்போதைய சந்தை மதிப்பின் ஒரு சதவீதம் வரியாக செலுத்த வேண்டும். இதுவரை ரொறன்ரோவில் எத்தனை காலி விடுகள் உள்ளதாக உறுதியான தரவுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள்,
மொத்தமுள்ள வீடுகளில் கண்டிப்பாக ஒரு சதவீதம் காலியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் ஆண்டுக்கு 55 மில்லியன் டொலர் முதல் 66 மில்லியன் டொலர் வரை வருவாய் திரட்ட முடியும் என எதிர்பார்க்கின்றனர்.