மொபைலுக்கு வந்த பகீர் புகைப்படங்கள்: புறப்பட்ட பயணிகள் விமானம் உடனடி ரத்து
இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று, சில நிமிடங்களிலேயே தரையிறக்கப்பட்டு, பயணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விமான பயணிகளின் மொபைல் போன்களில் விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள் பகிரப்பட்ட நிலையிலேயே விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது துருக்கி நோக்கி புறப்பட்ட அந்த விமானத்தில் 160 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தயாரான நிலையிலேயே பயணிகளின் மொபைல் போன்களில் விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.
இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள், விமானிக்கு தகவல் தெரிவிக்கவே, விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் Apple’s AirDrop சேவையில் இருந்து விமான விபத்து புகைப்படங்கள் பகிர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தொடர்புடைய புகைப்படங்கள் அனைத்தும் 2009 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் விபத்துக்குள்ளான துருக்கிய ஏர்லைன்ஸ் விமானமும், 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த மற்றொரு விமான விபத்து தொடர்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
2009ல் நடந்த விபத்தில் 9 பயணிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 2013ல் நடந்த விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.
மேலும், இந்த விமான விபத்து புகைப்படம் தொடர்பில் இஸ்ரேலிய இளைஞர்கள் பலர் சிக்கியுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.