வான்கூவரில் ஈஸ்டர் ஞாயிறு நடந்த துயரம்: உருக்கமான கோரிக்கை வைத்த குடும்பம்
வான்கூவரில் ஈஸ்டர் ஞாயிறன்று கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட நபர் தொடர்பில், குற்றவாளிகளை கைது செய்ய தகவல் தந்து உதவுமாறு அவரது பெற்றோர் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வான்கூவரில் 46 வெஸ்ட் ஹேஸ்டிங்ஸ் தெருவில் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்த இடத்தில் 37 வயதான ராபின்சன் ரஸ் கொடூரமாக தாக்கப்பட்டார்.
ஏப்ரல் 4ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் குற்றுயிராக மீட்கப்பட்ட ராபின்சன் ரஸ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Haida Gwaii பகுதியில் பிறந்து வளர்ந்த ரஸ், 11 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பொருட்டு வான்கூவர் வந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான ரஸ், பெற்றோர் மீதும் குடும்பத்தினர் மீது மிகுந்த பாசமும் அக்கறையும் கொண்டவர் என தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், ரஸ் கொலை வழக்கில் பலர் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாமல் இந்த வழக்கு தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ரஸ் வழக்கில் கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவரது குடும்பத்தினர் 2,000 டொலர் வெகுமதி அறிவித்துள்ளனர்.
குற்றவாளியை கைது செய்யும் பொருட்டு, உறுதியான தகவல் அளிக்க பொதுமக்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
2021 பிறந்த பின்னர் வான்கூவரில் நடக்கும் 4வது படுகொலை இதுவென பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.