பிராம்ப்டனில் படுகாயங்களுடன் மரணமடைந்த பெண் தொடர்பில் பொலிசார் விசாரணை
பிராம்ப்டனில் புதன்கிழமை படுகாயங்களுடன் மரணமடைந்த பெண் தொடர்பில் பீல் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அதிகாரிகள் சம்பவப்பகுதிக்கு விரைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் பெண் ஒருவரை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். இதனையடுத்து படுகொலை தொடர்பில் விசாரிக்க உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய கான்ஸ்டபிள் அகில் மூக்கன், நடைபாதையில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடப்பதாக 911 இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த பெண்மணியை மீட்டுள்ள பகுதியில் இருந்து சில ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், அது விசாரணைக்கு உதவும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் மூக்கன் கேட்டுக்கொண்டுள்ளார்.