நிலை குலைந்து போயுள்ள ஒட்டாவா நகரம்: மேயரின் அதிரடி அறிவிப்பு
கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து கனடா தலைநகர் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லொறி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டமானது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது.
இதனால் கனடா தலைநகர் ஒட்டாவாவில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, (Justin Trudeau) குடும்பத்துடன் இரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் மக்களின் இந்த போராட்டம் ‘உண்மைக்கு ஒரு அவமானம்’ என கூறி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கட்டாய கொரோனா தடுப்பூசி முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒட்டாவா நகரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் (Doland Trump) உள்ளிட்ட சிலர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
பெருந்திரளானோர் ஒன்று கூடி நடத்தி வரும் இந்த போராட்டத்தால் ஒட்டாவா நகரம் நிலை குலைந்து போயுள்ளது. இந்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஒட்டாவா நகர மேயர் ஜிம் வோட்சன் (Jim Watson) அறிவித்துள்ளார்.
அவசர நிலையை அறிவித்ததற்கு பின் அவர் கூறுகையில் “போராட்டம் காரணமாக அவசர நிலை பிரகடனப்பட்டிருப்பது ஒட்டாவா நகரவாசிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதை வெளிக்காட்டுகிறது. அதனை உறுதி செய்வதற்காக அரசிடம் இருந்து ஆதரவு நடவடிக்கைகளை எதிர்பார்த்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.