துப்புக்கொடுத்தால் 100,000 டொலர் சன்மானம்: இளைஞர் தொடர்பில் பொலிசார் அறிக்கை
ஆல்பர்ட்டாவில் கொலை வழக்கு தொடர்பில் தேடப்படும், 100,000 டொலர் சன்மானம் அறிவிக்கப்பட்ட குற்றவாளி, வான்கூவர் பகுதியில் பதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கல்கரி பொலிசார் வெளியிட்ட தகவலில், தேடப்பட்டு வரும் கொலை வழக்கு குற்றவாளி Kier Bryan Granado கண்டிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் தமக்கு ஆதரவளிக்கும் கும்பலின் பாதுகாப்பில் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
கல்கரியில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை சம்பவம் தொடர்பில் 24 வயதான Granado கடந்த 2019 முதல் தேடப்பட்டு வருகிறான்.
Hussein Merhi என்ற 26 வயது இளைஞரை கொலை செய்த வழக்கிலேயே குறித்த இளைஞர் தேடப்படுகிறார். கடந்த ஜனவரி மாதம், குறித்த இளைஞரை கைது செய்யும் பொருட்டு, உறுதியான தகவல் அளிப்பவருக்கு 100,000 டொலர் சன்மானம் அளிக்கப்படும் என பொலிஸ் தரப்பு அறிவித்தது.
ஆனால் இதுவரை இந்த வழக்கு தொடர்பில் துப்புத்துலங்காத நிலையில் இந்த சன்மானம் பெறும் வாய்ப்பு ஜூலை 20ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
இதனால், தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ள கோரிக்கை வைத்துள்ளனர்.