ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி அரசியலில் குதிப்பேன்; சசிகலா
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு தீவிர அரசியலில் குதிப்பேன் என சசிகலா முன்னாள் எம்.எல்.ஏ. ஏழுமலையிடம் தெரிவித்துள்ளார்.
சசிகலா தனக்கு கடிதம் எழுதும் கட்சி நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏழுமலையிடம் நேற்று சசிகலா பேசுகையில்,
2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாத நேரத்திலும் பிரசாரம் மேற்கொண்டு அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்தார். ஆனால் அதை மறந்துவிட்டு சிலர் கட்சியை சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு இருந்தால் இன்றைக்கு ஆட்சி நம்ம ஆட்சியாக இருந்திருக்கும். அதனால ஒன்னும் கவலைப்படாதீங்க. நிச்சயம் நல்லது நடக்கும். அவங்க எதுவும் புரியாம செஞ்சுட்டாங்க. அதை உணருகிற நேரம் வந்திருச்சு. கட்சி தொண்டர்களுக்கும் தெரியுது.
தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லாத் தெரியுது. கூவத்தூருல அன்றைக்கு எல்லோரும் நான் சொன்னேன்னு தானே கையெழுத்து போட்டீங்க. அம்மாவுக்கு பிறகு அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை சிதறாமல் பார்த்துக் கொண்டேன். இது தொண்டர்களுக்கு தெரியும். கட்சி நல்லாயிருக்கணும்னு நினைச்சு ஆட்சியையும் ஒப்படைத்து விட்டு சென்றேன்.
ஆனால் அந்த ஆட்சியை இவர்களால் மீண்டும் கொண்டு வர முடியவில்லை. இப்போது கொரோனா ஊரடங்கு 12ஆம் திகதி வரைக்கும் சொல்லி இருக்காங்க. அது முடிஞ்சதும் நான் வந்துடுவேன். ஜெயலலிதா சமாதிக்கு போயிட்டு அதுக்கப்புறம் நான் எல்லோரையும் பார்க்கிறேன். அ.தி.மு.க.வை நான் வழி நடத்துவது நிச்சயம் நடக்கும்.
எதையுமே யோசிச்சு நல்லபடியா செய்யலாம். எல்லோரும் பார்த்து வியக்கிற அளவுக்கு கட்சியை கொண்டு வந்துடுவோம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா இருவரையும் நினைத்து கட்சி பணியாற்றினால் மீண்டும் கழகம் வீறுகொண்டு எழும். அடுத்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம ஜெயிச்சிடலாம். தொண்டர்களின் ஆசையை நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என சசிகலா கூறியதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.