பாகிஸ்தான் யுவதி மலாலாவுடன் இணையும் பிரபல தொலைக்காட்சி
நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் யுவதியான மலாலா யூசுப்ஸாய், அப்பிள் நிறுவனத்துடன் இணைந்து நாடகங்கள், சிறுவர் தொடர்கள் முதலானவற்றை தயாரிக்கவுள்ளார். ‘அப்பிள் ரீவி பிளஸ்’ இணைய அலைவரிசையில் மலாலா தயாரிக்கும் நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அப்பிள் இலத்திரனியல் சாதனங்களை தயாரிக்கும் அப்பிள் இன்கோர்பரேஷன் நிறுவனம் ‘அப்பிள் ரீவி பிளஸ்’ (AppleTV+ ) எனும் இணையத்தள அலைவரிசையை 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இதில் பிரபல ஹொலிவூட் பிரமுகர்களான ஸ்டீவன் ஸ்பில்பேர்க், ஜெனிபர் அனிஸ்ட்ன.
வில் ஸ்மித், தொலைக்காட்சி நட்சத்திரம் ஒப்ரா வின்பிறே உட்பட பல் அப்பிள் ரீவி பிளஸ் அலைவரிசையில் நிகழ்ச்சியை தயாரித்துள்ளனர். இந்நிலையில் அப்பிள் ரீவி பிளஸில் நிகழ்ச்சிகளை தயாரிப்பது தொடர்பாக அப்பிள் இன்கோர்பரேஷன் நிறுவனத்துக்கும் மலாலா யூசுப்ஸாய்க்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினமான திங்கட்கிழமை அப்பிள் நிறுவனம் இதனை அறிவித்தது.
இதன்படி, நாடகங்கள், சிறுவர் தொடர்கள், ஆவணப்படங்கள், நகைச்சுவைத் தொடர்கள் போன்றவற்றை மலாலா யூசுப்சாய் தயாரிப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏற்கெனவே ஒரு லட்சம் சிறுமிகளுக்கு இலவசமான, பாதுகாப்பான, தரமான கல்வியை வழங்கும் திட்டத்துக்காக மலாலாவும் அப்பிள் நிறுவனமும் 2018 ஆம் ஆண்டில் இணைந்து செயற்பட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டில், அப்போது 12 வயது சிறுமியாக இருந்த மலாலா யூசுப்ஸாய், தலையில் சுடப்பட்ட நிலையில் உயிர்தப்பினார். அவருக்கு பிரிட்டனில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. பாகிஸ்தான் தலிபான்களின் நிர்வாகத்தில் வாழ்தல் தொடர்பாக பிபிபிக்கு புனைப்பெயரில் எழுதிய ஆக்கங்கள் காரணமாக அவர் சுடப்பட்டிருந்தார் சிறுமிகளின் கல்விக்காக தொடர்ந்தும் தீவிரமாக குரல்கொடுத்துவரும் மலாலா யூசுப்ஸாய்க்கு 2014 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆகக் குறைந்த வயதில் (17) நோபல் பரிசை வென்றவராக மலாலா விளங்குகிறார்.
தற்போது 23 வயதான மலாலா யூசுப்ஸாய், அப்பிள் ரீவி பிளஸுடன் இணைவது தொடர்பாக கூறுகையில், இந்த கூட்டுப் பங்காண்மை மூலம், இத்தளத்துக்கு புதிய குரல்களை என்னால் கொண்டுவர முடியும் என நம்புகிறேன். என் ஊடாக மேலும் பல சிறுமிகள் இந்நிகழ்ச்சிகளை பார்வையிடுவர் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார் மலாலா .