இஸ்ரேலில் அரசியல் நெருக்கடி ஏற்படும் சாத்தியம்
இஸ்ரேலில் அரசியல் நெருக்கடி ஏற்படும் சாத்தியங்கள் உருவாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகளின்படி, தற்போது அங்கு தேர்தல் ஒன்று நடைபெறுமாக இருந்தால், பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு தலைமையிலான ஆளும் கட்சி தோல்வி காணும் என்று தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் எதிர்த்தரப்பினர் அந்த நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான யோசனை ஒன்றையும் முன்வைத்துள்ளனர். இந்த யோசனைக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் ஆளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய டோரா யூதர்கள் கட்சி, தீவிர மரபுவழி பிரிவினருக்கான கட்டாய இராணுவ சேவையிலிருந்து சலுகை வழங்காவிட்டால், அமைச்சரவையிலிருந்து விலகப்போவதாக எச்சரித்துள்ளது.
மேலும் காசாவுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான போர் தொடர்பாகவும் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் முன்னாள் பிரதமர் யாயிர் லாபிட் தலைமையிலான யேஷ் ஆட்டிட் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கலைப்புக்கான யோசனை அடுத்தவாரம் வாக்கெடுப்புக்கு வருகிறது.
இந்த யோசனை நிறைவேற்றப்படுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 120 உறுப்பினர்களில் 61 பேரின் ஆதரவு தேவையாக உள்ளது.