கனடாவில் நால்வர் கொலை குறித்து குற்றவாளியின் தாயார் வெளியிட்ட அறிக்கை
கனடாவில் இஸ்லாமிய குடும்பம் ஒன்று வாகனத்தால் மோதி கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியின் தாயார் தமது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கனடாவில் இஸ்லாமிய குடும்பம் ஒன்று இளைஞர் ஒருவரால் மதவெறுப்பு காரணமாக கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் 20 வயதான Nathaniel Veltman என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில், குற்றவாளியின் தாயார் Alysia Bisset தமது சட்டத்தரணியின் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த மோசமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது மனப்பூர்வமான பிரார்த்தனை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கைதாகியுள்ள Nathaniel Veltman மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மத வெறுப்பு காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு நம்புகின்றனர்.
இருப்பினும், கைதான இளைஞர் மீது பயங்கரவாத வழக்குகள் பதியவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.