நிதி நெருக்கடி; வாடகைக்கு விடப்படும் பிரதமர் இம்ரான் கானின் அரச இல்லம்!
பாரிய நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்தை கல்வி மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடத் தயார் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு 2 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.
அதன்படி, இந்த அமைப்பு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கருப்பு பட்டியல், கிரே பட்டியல் என இரு வகைகளாக பிரிக்கிறது கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள், ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அதனுடன், நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் உலக நாடுகள் வைத்துக்கொள்ளாது. அதேபோல கிரே பட்டியலில் உள்ள நாடுகள், எந்த நேரத்திலும், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையுடன் வைக்கப்படுகின்றன.
இவற்றுக்கு, உலக நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல், பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம், பிற நாடுகளுடன் வர்த்தக தொடர்பும் நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம். அவ்வகையில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. எனவே, இப்போதுவரை பாகிஸ்தான் கிரே பட்டியலில்தான் உள்ளது. இதனால் எந்த உதவியையும் பெற முடியாத நிலைமையில் நாடு உள்ளது.
பாகிஸ்தான் கடந்த வருடம் மோசமான நிதிநெருக்கடியில் நாடு சிக்கியது. சர்வதேச நிதியத்திடம் உதவியும் கேட்டது ஆனால், பாகிஸ்தான் கேட்டதும், உதவி செய்ய தயாராக இல்லை என சர்வதேச நிதியம் கூறிவிட்டது. எனவே, பாக். ராணுவம் தங்களது பட்ஜெட்டையும் குறைத்து கொள்ள தயாரானது. அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் செலவிடப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
ஏற்கனவே, ஏகப்பட்ட பாதுகாப்பு சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தான் இராணுவத்தின் செலவையும் அன்றைய தினம் குறைத்து கொண்டது என்றாலும், இப்போது நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பாகிஸ்தான் நிதிநெருக்கடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இம்ரான் கானின் அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்தை கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடத் தயார் என பாகிஸ்தான் அதிரடியாக அறிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதால் அரசு செலவினங்களைக் குறைப்பதற்காக ஆடம்பரமான அரசு இல்லத்தில் பிரதமரும், ஆளுநர் மாளிகைகளில் ஆளுநர்களும் தங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கிரே லிஸ்ட்டில் வைத்திருப்பதால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.