பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் ராஜினாமா செய்த பிரதமர்!
தென் அமெரிக்க நாடான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (Hector Valar Pinto ) (வயது 63), கடந்த முதலாம் திகதி பதவி ஏற்ற நிலையில் பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் பிரதமர் ராஜினாமா செய்திருப்பது பெரு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹெக்டர் வலர் பின்டோ (Hector Valar Pinto ) மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் 2016-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவியும், மகளும் புகார் அளித்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் ஹெக்டர் வலர் பின்டோ (Hector Valar Pinto ) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறியதாக பெரு நாட்டின் வானொலி அறிவித்தது.
அவர் துஷ்பிரயோகம் செய்பவர் என வெளியான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என விளக்கியதுடன், தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் பெட்ரோ காஸ்டிலோவிடம் அளித்து விட்டார்.
மேலும் தனக்கு எதிராக குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை கூறியவர்கள் மீது அவர் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.