பிரித்தானியாவின் ஏதிலிக் கொள்கை குறித்து இளவரசர் சார்ள்ஸ் அதிருப்தி
பிரித்தானிய அரசாங்கத்தின் ஏதிலிக் கொள்கை குறித்து அந்நாட்டு இளவரசர் சார்ள்ஸ் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ஏதிலிக் கோரிக்கையாளர்களை கிழக்கு ஆபிரிக்க நாடான ருவண்டாவிற்கு அனுப்பி வைக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டம் ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு தொகுதி ஏதிலிகள் அடுத்த வாரம் விமானம் மூலம் ருவான்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ள நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ருவான்டாவில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் சார்பில் இந்த மாநாட்டில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்க உள்ளார். பிரித்தானிய அரசாங்கத்தின் ஏதிலிக் கொள்கை ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக் கணக்கான ஏதிலிகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.