சீனாவில் வெடித்த போராட்டம்; செய்தியாளரை அடித்துதைத்த பொலிஸார்!
சீனாவில் அரசுக்கு எதிரான போராட்ட செய்தியை படம் பிடித்த பிரபல தனியார் செய்தி நிறுவன நிருபரை கைது செய்து அடித்து, உதைத்தமை பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளுக்கு தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா தொற்று முதன்முறையாக கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட முன்பே பரவலை சீனா கட்டுப்படுத்தி இருந்தமையானது சர்வதேச நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் நேற்று 40 ஆயிரத்திற்கு சற்று குறைவாக, 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 36,082 பேர் அறிகுறியற்றவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் சுகாதார ஆணையம் வெளியிட்டது.
கடுமையான ஊரடங்கு
கொரோனா அதிகரிப்பை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்து வருகிறது. இந்நிலையில் சீன அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை ஷாங்காய் நகரில் நடந்த போராட்ட நிகழ்வை படம் பிடிக்க பிரபல தனியார் செய்தி சேனலான பி.பி.சி.யின் நிருபர் எட் லாரன்ஸ் என்பவர் சென்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்து அடித்தும், உதைத்தும் சித்ரவதை செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றி பி.பி.சி வெளியிட்ட அறிக்கையில், சீன அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது மன்னிப்போ இதுவரை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளது.