நூறாண்டுகளுக்கு ஒருமுறை... அவசர நிலையை பிரகடப்படுத்தவிருக்கும் கனேடிய மாகாணம்
தென் பிரிட்டிஷ் கொலம்பியாவில் புயலுக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை கருத்தில் கொண்டு அவசர நிலையை பிரகடனம் செய்ய பரிசீலித்து வருவதாக மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை மாகாண பொது பாதுகாப்பு அமைச்சர் மைக் ஃபார்ன்வொர்த் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் புயலால் ஏற்பட்ட தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக வானிலை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது நாம் நேரிடையாக காண்பது இயற்கை பேரழிவு எனவும் அமைச்சர் மைக் ஃபார்ன்வொர்த் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யும் முடிவை பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோப், கம்லூப்ஸ் மற்றும் கெலோவ்னா உட்பட மாகாணத்தின் 20 முக்கிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்கும் மையங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி,
சாலைப்போக்குவரத்து மொத்தமாக முடங்கியுள்ள நிலையில், ஹோப் பகுதிக்கு அவசரத் தேவைகளுக்காக சாலை ஒன்றை அமைத்துள்ளதாகவும், ஆனால் பெருவெள்ளம் மற்றும் மண்சரிவால் பிரதான சாலை 1 மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பிரதான சாலைகளில் தத்தளித்த வாகனம் மற்றும் சாரதிகளை பத்திரமாக மீட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதான சாலைகள் பலவும் மூடப்பட்டுள்ளதால், கப்பல் சேவையானது அதிக என்ணிக்கையில் முன்னெடுக்கப்படும் எனவும் மாகாணா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான சாலை 12 திறக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால் மண்சரிவினால் பெண் ஒருவர் இறக்க காரணமான பிரதான சாலை 99 சுத்தம் செய்யப்படாத நிலையில், திறந்து செயல்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.