கனடாவில் துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கிய தமிழர்: புகைப்படம் வெளியிட்ட பொலிஸ்
கனடாவில் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த 36 வயதான தமிழர் ஒருவருக்கு எதிராக 93 சிறார் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தகவல் பொலிஸ் தரப்பால் வெளியிடப்பட்டுள்ளது..
இந்த விவகாரம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த நபரின் பெயர், புகைப்படம் மற்றும் வழக்குகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ரொறன்ரோ பொலிசாரால் ரமணன் பத்மநாதா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள அந்த நபர், பல்வேறு இணைய பக்கங்களின் மூலம் சிறார்களிடம் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றதாக பொலிசாரால் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி அவருக்கு எதிராக அப்போது 25 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தேடப்படும் நபராகவும் ரொறன்ரோ பொலிசாரால் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையிலேயே செப்டம்பர் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை ரமணன் பத்மநாதா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் மீது மேலும் 68 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போது, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பொருட்டு, அந்த நபர் 93 துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸ் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் தொடர்பில் மேலும் பல சிறார்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், தகவல் தெரியவரும் மக்கள் விசாரணை அதிகாரிகள் அல்லது குற்றத்தடுப்பு பிரிவினரை அணுகுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.