ஏரியில் நடந்த துயரம்... இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்
ஒன்ராறியோவின் Huntsville ஏரியில் மூவர் மாயமான நிலையில், அதில் இருவர் சடலமாக மீடகப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் மீட்கப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை Port Sydney பகுதியிலேயே மூவர் தண்ணீரில் மூழ்கியதாக பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழுவினர், சுமார் ஒரு மணி நேர தீவிர தேடல் நடவடிக்கைக்கு பின்னர் மாயமான இருவரை மீட்டுள்ளனர்.
இருவரையும் Huntsville மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அதில் ஒருவர் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, தண்ணீரில் மூழ்கிய மூன்றாவது நபரையும் மீட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், போதிய எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட பின்னரே தண்ணீரில் இறங்க வேண்டும் என பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுறுத்தினர். மட்டுமின்றி ஏரியில் தனியாக யாரும் நீச்சல் பழக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.