குவைத் பிரதமருடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
வளைகுடா நாடான குவைத்தின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அகமது நாசர் அல்முகமது அல்சபா, கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தார். அவரது அழைப்பின்பேரில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று காலை குவைத்துக்கு சென்றார்.
இது, குவைத்துக்கான அவரது முதலாவது இருதரப்பு பயணம் ஆகும். விமான நிலையத்தில் அவரை உதவி வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் ரசாக் அல்கலீபா வரவேற்றார். இந்திய தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் இந்திய அதிகாரிகளும் வந்திருந்தனர். பின்னர், குவைத் பிரதமர் ஷேக் சபா காலித் அல்ஹமாத் அல்சபாவை ஜெய்சங்கர் சந்தித்தார்.
இந்தியா-குவைத் இடையிலான தூதரக உறவின் 60-வது ஆண்டு நிறைவையொட்டி, பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இருநாட்டு உறவை உயர்மட்டத்துக்கு கொண்டு செல்லும் உறுதிப்பாட்டுக்காக ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த பயணத்தின்போது, குவைத் ஆட்சியாளர் ஷேக் நவாப் அல்அகமது அல்ஜபார் அல்சபாவை ஜெய்சங்கர் சந்திக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை ஒப்படைக்கிறார்.
குவைத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்திக்கிறார்.