உங்கள் நாட்டுக்கே போய்விடு... சீனத்து மாணவியை பேருந்தில் தாக்கிய கனேடியர்
ரொறன்ரோவில் சீனத்து மாணவி மீது இனவாத ரீதியாக தாக்குதலில் ஈடுபட்ட கனேடியருக்கு வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பின் போது ஒன்ராறியோ நீதிமன்ற நீதிபதி, உடல்ரீதியான தாக்குதல் ஒப்பீட்டளவில் சிறியது, ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் 47 வயதான மைக்கேல் ஹென்னசி என்பவருக்கு 4 மாத கால வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பிற்பகலில் சீனாவைச் சேர்ந்த மாணவர் ஒரு நகர பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
அதே பேருந்தில் ஏறிய ஹென்னசி, மாஸ்க் அணிந்தபடி தமது வேலையில் கவனம் செலுத்தியபடி இருந்த சீனத்து மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மட்டுமின்றி, உங்களால் தான் உலக நாடுகளுக்கு இந்த நிலைமை, உங்கள் நாட்டுக்கே போய்விடுங்கள் என கத்தியுள்ளார்.
ஆனால் அந்த மாணவி, ஹென்னசியின் நடவடிக்கைகளை தமது மொபைலில் பதிவு செய்து வந்துள்ளார். இதை கவனித்த ஹென்னசி, அந்த மொபைலை பறிக்கும் நோக்கில் அந்த மாணவியை தாக்கியுள்ளார்.
ஆனால் மாணவியும் ஹென்னசியை திருப்பித் தாக்கியுள்ளார். மொபைலை அவர் விட்டுத்தரவில்லை என்றே நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
இந்த வழக்கில் ஹென்னசி குற்றவாளி என கடந்த மாதம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
இந்த நிலையில் நான்கு மாத வீட்டுக் காவல் தண்டனையும், 30 மணி நேர சமூக சேவையும் ஹென்னசிக்கு தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.