எதற்கும் தயார்; அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் சீனா
எந்தவொரு போரை எதிர்கொள்ளவும் தாம் தயாராக இருப்பதாக சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை விதித்ததற்கு, இது முதல் அதிகாரப்பூர்வ வாய்மொழி பதில் என தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும், டிரம்ப் அனைத்து சீனப் பொருட்களுக்கும் புதிய வரிகளை விதித்த பிறகு, வர்த்தகப் போரை நோக்கி நகர்ந்து வருவதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் வரிகளுக்கு உடனடி பதிலடி
இந்நிலையில் அமெரிக்காவின் வரிகளுக்கு உடனடி பதிலடியாக, சீனா அமெரிக்க விவசாயப் பொருட்கள் மீது 10 முதல் 15 சதவீதம் வரை புதிய வரிகளை விதித்தது.
இந்நிலையில் அமெரிக்கா போரை விரும்பினால், அது ஒரு வரிப் போராக இருந்தாலும் சரி, வர்த்தகப் போராக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி, நமது நாடு இறுதிவரை போராடத் தயாராக உள்ளது என சீனா கூறியுள்ளது.
டிரம்ப் ஜனாதிபதியான பிறகு சீனாவின் வலுவான வாய்மொழி பதிலாக இது கருதப்படுகிறது. தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்திர கூட்டத்திற்காக நாட்டின் தலைவர்கள் பெய்ஜிங்கில் கூடியிருந்த நிலையில், சீன அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், சீனப் பிரதமர் லீ கெகியாங், இந்த ஆண்டு சீனா தனது பாதுகாப்புச் செலவினங்களை மீண்டும் 7.2 சதவீதம் அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளார், ஒரு நூற்றாண்டில் காணப்படாத மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமாக நிகழும் என்று எச்சரித்துள்ளார்.
அதேவேளை அமெரிக்கா சீனா மீது மட்டும் புதிய வரிகளை விதிக்கவில்லை. அவர்கள் சீனாவை விட கனடா மற்றும் மெக்சிகோ மீது அதிக வரிகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.