ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு
ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு மொராக்கோ நாட்டின் எல்லை வழியாக நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் ஒரே நேரத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி நகரமான செவுட்டாவிற்குள் (Ceuta),அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவ முயன்றுள்ளனர்.

முன்கூட்டியே உளவுத்துறை தகவல்கள்
சமூக வலைதளங்கள் வாயிலாகத் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்தத் திரளான எல்லைக் கடக்கும் முயற்சியை, மொராக்கோ நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மொராக்கோவின் எல்லை நகரமான ஃபினிடெக் (Fnideq) பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு, ஸ்பெயின் எல்லையை நோக்கி முன்னேற முயன்றனர்.
இதனை முன்கூட்டியே உளவுத்துறை தகவல்கள் மூலம் அறிந்த மொராக்கோ காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர், ட்ரோன்கள் மற்றும் நவீன தடுப்புக் காவல்கள் மூலம் ஒட்டுமொத்தப் பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
முன்னதாக, ஜூலை மாத இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல் வழியாக நீந்தியும், தடுப்புச் சுவர்களைக் கடந்தும் செவுட்டாவிற்குள் புகுந்த சம்பவம் பெரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து, ஆகஸ்ட் 15-ஆம் தேதி மீண்டும் மாபெரும் அளவில் எல்லையை முற்றுகையிட்டு ஊடுருவுமாறு சமூக வலைதளங்களில் மர்மக் கணக்குகள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் இராணுவ வீரர்களும் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே ஆப்பிரிக்கப் நில எல்லையாகச் செயல்படும் செவுட்டா மற்றும் மெலில்லா பகுதிகள், சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முனையும் அகதிகளின் முதன்மை இலக்காக இருந்து வருகின்றன.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்கவும் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாடுகள் இணைந்து எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.