கனடாவின் முதல் பிரதமர் சிலைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
ஹாமில்டனில் Gore Park பகுதியில் அமைந்துள்ள கனடாவின் முதல் பிரதமர் சிலையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கனடாவில் பூர்வகுடி மாணவர்களின் எலும்பு கூடுகள், முன்னாள் உண்டுறை பள்ளி வளாகங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை மூன்று பள்ளி வளாகங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 1,500 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய ஆவணங்கள் இல்லை என்பதால் அடையாளம் காணப்படுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனேடிய உண்டுறை பள்ளிகளுக்கு தொடர்புடைய, இதுவரை கனடா மக்களால் முக்கிய தலைவர்களாக கருதப்பட்ட பலரின் சிலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக சேதப்படுத்தப்பட்டு வருகிறது.
கனடாவில் உண்டுறை பள்ளி கட்டமைப்பை உருவாக்கியதாக கருதப்படும் Egerton Ryerson என்பவரின் சிலையும் சேதப்படுத்தப்பட்டதுடன், பிரபல பல்கலைக்கழத்தின் பெயரும் மாற்றப்படும் நிலைக்கு சென்றுள்ளது மக்கள் போராட்டம்.
சமீபத்தில் விக்டோரியா ராணியாரின் சிலையும், எலிசபெத் ராணியாரின் சிலையும் சேதப்படுத்தப்பட்டு, பொதுமக்களால் உடைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கனடாவின் முதல் பிரதமரான Sir John A. Macdonald என்பவரின் சிலையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஹாமில்டனில் Gore Park பகுதியில் அமைந்துள்ள இந்த சிலைக்கு கடந்த வாரம் மக்கள் சிவப்பு வண்ணம் பூசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மட்டுமின்றி கருப்பு துணியால் மூடப்பட்டும் இருந்துள்ளது.
கனடாவின் முதல் பிரதமரான மெக்டொனால்டு அரசாங்கம் 1883 ம் ஆண்டில் பூர்வகுடி குழந்தைகளை அவர்களது குடும்பங்களிலிருந்து அகற்ற உண்டுறைப் பள்ளிகளை அறிமுகப்படுத்தியது.
மேலும், காட்டுமிராண்டித்தனங்களுக்கு மத்தியில் அந்த சிறார்கள் வளரவிடாமல் தடுப்பதே தமது நோக்கம் எனவும் அவர் பாராளுமன்ற சபையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.