ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்
ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
எனினும் அமெரிக்காவும் ஈரானும் அவ்வப்போது போர் நிறுத்தத்தை மீறி வருகின்றன. இந்த சூழலில் ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஐனநாயக கட்சி சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆதரவாக 215 எம்.பிக்களும், எதிராக 208 எம்.பிக்களும் வாக்களித்தனர்
இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 215 எம்.பிக்களும், எதிராக 208 எம்.பிக்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 4 எம்.பிக்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த தீர்மானத்தின் மீது செனட் அவையில் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மொத்தமுள்ள 100 எம்.பிக்களில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 எம்.பிக்கள் உள்ளனர். ஜனநாயக கட்சிக்கு 45 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். பிரதிநிதிகள் அவை போன்று செனட் அவையிலும் ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த சில எம்.பிக்கள் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.
ஒருவேளை செனட் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை இரத்து செய்ய முடியும்.
ஜனாதிபதி ட்ரம்ப் நிருபர்களிடம், “அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.
அதேசமயம் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, “லெபனான் மீதான தாக்குதல் காரணமாக அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.