தமிழின அழிப்பு நிகழ்வுக்கு முக்கியம் கொடுத்த ரொய்ட்டர்ஸ்!
தமிழின அழிப்பு நாஅளான மே 18 நாள் நினைவு தின நிகழ்வுக்கு உலக புகழ் பெற்ற செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி பிரித்தானியாவில் மீள்குடியேறிய ஈழத் தமிழர்கள் நேற்றைய தினம் லண்டனில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கவனயீர்ப்புப் பேரணி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பிரதான செய்திகளில் ஒன்றாக பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்து ரொய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில்,
இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடியையும், உள்நாட்டு போரின் போது தமிழர்கள் எதிர்கொண்ட நிலைமையும் ஒப்பிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
யுத்தத்தின் போது இலங்கையில் கொல்லப்பட்ட தமது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு நீதி கோரி தமிழர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர். இந்த நிலையில் பெண் ஒருவர் ரொய்ட்டர்ஸ் ஊடகத்திற்கு கருத்து வெளியிடுகையில்,
“இலங்கை ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது போரின் போது எங்களுடைய போராட்டங்களை நினைவூட்டுகிறது. போர் காலத்தில் எரிபொருள், உணவு, மருந்து தட்டுப்பாடு ஆகியவற்றை இலங்கையின் தமிழர்கள் வாழந்த பகுதிகளில் உள்ள மக்களே எதிர்கொண்டார்கள். ஆனால் இன்று முழு நாடும் எதிர்கொள்கின்றனர். கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு Trafalgar சதுக்கத்தில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் மற்றுமொருவர் கூறுகையில், “எனது பெற்றோர் மற்றும் நண்பர்கள் இன்னும் இலங்கையில் உள்ளனர், ஆனால் நான் நாட்டிற்கு திரும்பிச் செல்ல மிகவும் பயந்தேன். ஆனால் இப்போது பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பதற்கான கதவுகளைத் திறக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசாங்கம் தமிழ் விடுதலை புலிகளுடனான போரில் வெற்றிபெற்றதாக அறிவித்தது. அந்த போரின் முடிவில் இலங்கையில் இருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்த நூறாயிரக்கணக்கான தமிழர்களில் இவர்களும் உள்ளடங்குவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








