பிரித்தானியாவில் கடுமையாக அதிகரித்த பணவீக்கம்!
பிரித்தானியாவில் மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வால், கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி, பிரித்தானியாவின் நுகர்வோர் விலை குறியீடு (CPI) 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரித்தானியாவில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவில் தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கு கடந்த 12 மாதங்களில் மின்சார கட்டணங்கள் விலை உயர்வு 53.5% ஆகவும், எரிவாயு விலை 95.5% ஆகவும் உயர்ந்துள்ளது.
மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிப்பால் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கிராண்ட் பிட்ஸ்னர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உயர்ந்து வரும் இந்த பணவீக்கத்தின் காரணமாக குறைந்த வருமானத்தை உடைய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த பிரித்தானியா அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.