இரவு முழுவதும் துப்பாக்கி சூடு ; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்
தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதி கொண்டனர்.

போர் பேச்சுவார்த்தை
இதில் கம்போடியா இராணுவ வீரர் உயிரிழந்தார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. கடந்த ஜூலை மாதம் 24ம் திகதி முதல் 28ம் திகதி வரை நடந்த போரில் 48 பேர் உயிரிழந்தனர்.
இரு நாட்டு எல்லையில் இருந்தும் சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த போரின்போது எல்லையில் கண்ணிவெடிகள் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டன.
5 நாட்கள் நடந்த போர் பேச்சுவார்த்தைக்குப்பின் முடிவுக்கு வந்தது. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தாய்லாந்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டிராட் மாகாணத்தில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இதன் மூலம் தாய்லாந்து-கம்போடியா இடையிலான எல்லை பிரச்சினை கடலோர பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதனை தொடர்ந்து டிராட் மாகாணத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பும் சண்டையை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், துப்பாக்கி சூடு காரணமாக தாய்லாந்து-கம்போடியா எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.,