பிரான்ஸை உலுக்கிய கொலை; சக மாணவியை கொன்று ஆற்றில் வீசிய காதலர்கள்
சக மாணவியை அடித்து ஆற்றில் வீசிக்கொன்ற இளம் காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பிரான்ஸ் நாட்டை பரபரப்படையச் செய்துள்ளது. பாரீஸுக்கு வெளியே உள்ள Argenteuil என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி Alisha (14). அவரின் தகாத புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் Alishaவுக்கும் அவளுடன் படிக்கும் ஒரு மாணவன் மற்றும் அவனது காதலியான சக மாணவி ஆகியோருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் Alisha தன் தாயிடம் கூறி, ஒரு நாள் அவர்கள் என்னைக் கொலை செய்துவிடப்போகிறார்கள் என கூறியிருக்கிறாள்.
இதனையடுத்து , கடந்த திங்கட்கிழமை, தங்களை சந்திக்க வருமாறு Alishaவுக்கு இருவரும் குறுஞ்செய்தி அனுப்ப, அவளும் அவர்களை சந்திக்கச் சென்றிருக்கிறாள்.
அப்போது, தூண் ஒன்றின் பின்னால் மறைந்திருந்த மாணவன் Alishaவை பின்னாலிருந்து கீழே தள்ளி அவளை தாக்கியிருக்கிறான். தனது கைரேகை அவள் மீது படக்கூடாது என்பதற்காக அவன் கையுறையும் அணிந்திருந்திருக்கிறான். Alisha வை குத்தி, அடித்து, தலை முடியைப் பிய்த்து, அவனும் காதலியுமாக சேர்ந்து அவளைத் தூக்கி Seine என்ற ஆற்றுக்குள்
வீசியிருக்கிறார்கள். அதன்பின்னர் இருவரும் வீட்டுக்கு திரும்ப, அந்த பையனின் சட்டையில் இரத்தக்கறை இருந்திருக்கிறது. அவன் தன் தாயிடம் தான் Alishaவை தாக்கி ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டதாக கூற, பதறிப்போய் அந்த பெண் ஆற்றுக்கு ஓடியிருக்கிறார்.
அங்கே இரத்தக்கறை படிந்த கையுறை மற்றும் ஒரு கொத்து தலைமுடி ஆகியவை கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் அவர்.
எனினும் , அவர் வீடு திரும்பும்போது அவரது மகனும் காதலியும் அங்கே இல்லை. இதற்கிடையில் தன் மகளை காணவில்லை என Alishaவின் தாய் பொலிசாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.
பொலிசார் Seine ஆற்றுக்கு சென்றபோது, அங்கே Alishaவின் உயிரற்ற உடலைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அவளை ஆற்றில் தள்ளிய காதலர்கள், மற்றொரு நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதைக் கண்டு பொலிசார் அவர்களை கைது செய்துள்ளார்கள். இந்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.