சிரியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் ரோமன் கால சிலைகள் திருட்டு
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டு நடைபெற்றுள்ளது. திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருட்டுப் போனது இன்று காலை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பல சிலைகள் திருட்டு
சிரியாவின் தொல்பொருட்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கான இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர், 6 சிலைகள் திருடப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மற்றொரு அதிகாரி பல சிலைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் சரியான எண்ணை அவர் குறிப்பிடவில்லை. அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடாததால், இரண்டு அதிகாரிகளும் பெயரை குறிப்பிடவில்லை.
50 வருட ஆசாத் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, கொள்ளை நடக்க வாய்ப்புள்ளதாக கருதி அருங்காட்சியகம் மூடப்பட்டது.
கடந்த ஜனவரி 8-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது. சிரியாவில் மார்ச் 2011-ல் மோதல் தொடங்கிய பிறகு, அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை டமாஸ்கஸுக்கு கொண்டு வந்தனர்.