மீண்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷியா !
உக்ரைன் மீது கடந்த மாதம் 24 ஆம் திகதி ரஷியா போரை தொடங்கியது. உகரைன் தலைநகா் கீவை கைப்பற்றிவிட்டால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் ரஷிய கீவ் நகரை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது.
ஆனால், அங்கு உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக ரஷிய படையினரால் கீவ் நகருக்குள் முன்னேற முடியவில்லை. இதனால் உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ், தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் மற்றும் வடகிழக்கு நகரமான சுமி ஆகிய நகரங்களில் ரஷிய படைகள் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வந்தன.
ரசியாவின் இந்த தாக்குதலால் வெளிநாட்டினர் மற்றும் உக்ரேனியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக சுமி நகரில் 700-க் கும் அதிகமான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி யுத்த களத்தில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் சுமி நகரில் சிக்கியுள்ளவர்களை வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பையும் இந்தியா கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய 4 நகரங்களிலும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா நேற்று அறிவித்தது. இந்தநிலையில், மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில், ரஷியா மீண்டும் போர் நிறுத்தத்தை அறிவித்தது.
அதேசமயம் மனிதாபிமான அடிப்படையில் இந்தியர்கள் வெளியேற உதவுவதற்காக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.