உக்ரைனில் படிப்பை பாதியில் நிறுத்தி நாடு திரும்பிய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா!
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்கள் உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் நடப்பு செமஸ்டருக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்கள் கூறியுள்ளன.
மேலும், முதலாமாண்டு, 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தடையின்றி படிப்பைத் தொடர ஏதுவாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் மட்டுமன்றி கிரீமியா, கஜகஸ்தான், ஜார்ஜியா, ஆர்மேனியா, பெலாரஸ், போலந்து நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கும் ரஷ்யா இந்த அழைப்பை விடுத்துள்ளது.
அதேசமயம் உக்ரைன் - ரஷ்யா போரினால், அங்கு கல்விகற்றுவந்த வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் சொந்த நாடுகளுக்குத் திரும்பியிருந்தனர்.
இந்நிலையில் உக்ரைனில் மருத்துவம் படித்து இந்தியா திரும்பியுள்ள 16 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளின் அழைப்புகள் அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை விளக்கேற்றி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.