போரை நிறுத்தப்போவதில்லை; சர்வதேச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்திய ரஷியா!
உக்ரைன் மீது நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில் அதனை ரஷியா உதாசீனம் செய்து போரை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று 22-வது நாளாகவும் போர் தொடுத்து வருவதுடன், உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றியதுடன், தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. இதற்கிடையில், தங்கள் நாட்டில் ரஷியா இனப்படுகொலை நடத்தி வருவதாகவும் குற்றம் சுமத்திய உக்ரைன், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.
இதனையடுத்து நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. அதில், உக்ரைன் மீது நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் உக்ரைன் மீது நடத்திவரும் தாக்குதலை ரஷியா நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் , உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரஷியா நிராகரித்துள்ளதுடன் உக்ரைன் மீதான தாக்குஇதலையும் ரஷியா தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.