இனி ரஷ்யாவை நம்ப முடியாது; இங்கிலாந்து அதிபர் அதிரடி முடிவு
ரஷ்யா - உக்ரைன் போரால் இங்கிலாந்தில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சவூதி அரேபியாவிடம் இங்கிலாந்து அதிபர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson) பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது பல நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.
ஒருபுறம் உலகளாவிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உயர்ந்துவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கருத்தில்கொண்டு சவூதி அரேபியாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருக்கிறார் அந்நாட்டின் அதிபர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson).
இது அந்நாட்டு சட்ட நிபுணர்கள், மனித உரிமை ஆர்வலர்களை மட்டுமல்லாது பல நாடுகளையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக சவூதி ஊடக முகமை வெளியிட்ட செய்தியில்," கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆயுத கடத்தல், தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்களை செய்த 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஜான்சன்," கடந்த காலங்களில் பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறேன். இப்போதும் எழுப்புவேன். அதே நேரத்தில் அந்த நாட்டுடன் (சவூதி அரேபியா) சுமூகமான உறவில் இருப்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவிற்கு செல்ல இருக்கும் போரிஸ் ஜான்சன்(Boris Johnson) அந்நாட்டு அதிகாரிகளுடன் பெட்ரோல் இறக்குமதி குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த வாரத்தில் இங்கிலாந்தின் தேசிய ஆற்றல் கொள்கையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட இருப்பதாகவும் ஜான்சன் குறிப்பிட்டிருக்கிறார்.