புடினிடம் தவறான தகவல்களை தெரிவிக்கும் ஆலோசகர்கள்! அமெரிக்கா தகவல்
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது மற்றும் பொருளாதார தடைகளால் ரஷ்யா எப்படி முடங்கி கிடக்கிறது என்பது பற்றி அதிபர் புடினிடம் தவறான தகவல்கள் சொல்லப்படுதாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்ய துருப்புகளால் கைப்பற்ற முடியவில்லை.
உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருவதால் ரஷ்ய இராணுவத்தால் முன்னேற முடியவில்லை. உக்ரைனில் ரஷ்ய துருப்புக்கள் பின்னடைவை சந்தித்து வருவதாக அமெரிக்கா, பிரித்தானியா தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அவரது நாட்டு ராணுவத்தாரால் தவறாக வழிநடத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை செயலாளர் கேட் பெடிங்பீல்ட் கூறியதாவது,
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அவரது ராணுவத்தால் தவறாக வழிநடத்தப்பட்டதாக உணர்ந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது உக்ரைன் போருக்கிடையில் புடினுக்கும், அவரது ராணுவ தலைமைக்கும் தொடர்ந்து பதற்றமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது மற்றும் பொருளாதார தடைகளால் ரஷியா எப்படி முடங்கி கிடக்கிறது என்பது பற்றி புதினிடம் தவறான தகவல்கள் சொல்லப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
ஏனென்றால் புடினின் மூத்த ஆலோசகர்கள் அவரிடம் உண்மையை சொல்ல பயப்படுகிறார்கள். புடின் தொடங்கிய போர் தவறானது என்பது தெளிவாகி இருக்கிறது. இது ரஷ்யாவை நீண்ட காலத்துக்கு பலவீனப்படுத்தும். மேலும் உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்துவது அதிகரிக்கும் என்றார்.
மேலும் தன்னிடம் தவறான தகவல்களை கூறியதால் புடின் ஆத்திரத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.