ஈரானிடமிருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை வாங்கும் ரஷ்யா!
உக்ரைன் போரில் பயன்படுத்த ஈரானிடமிருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷ்யா வாங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.
இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஈரானிடம் ரஷ்யா உதவி கேட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானிடம் உள்ள ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஆளில்லா டிரான் விமானங்களை ரஷ்யா வாங்க உள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவென்(Jack Sullivan) இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்யாவுக்கு சில நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள், ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஆளில்லா விமானங்களை ஈரான் வழங்க உள்ளது.
இந்த ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை ரஷ்ய படையினருக்கு இந்த மாதமே கற்றுக்கொடுக்க ஈரான் தயாராகி வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும் ஜக் சுலிவென்(Jack Sullivan) தெரிவித்துள்ளார்.