ரஷ்யாவின் கொடூர செயல்: கார்கிவ் நகரில் பொதுமக்கள் 8 பேர் பலி!
உக்ரைனின் முக்கிய நகரமாக கருதப்படும் கார்கிவ் நகரில், ரஷிய விமான படைகள் இன்று வான்வழி தாக்குதல் நடத்தின.
ரஷ்யா இன்று (01-02-2022) ஆறாவது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந் நிலையில் உக்ரைன் கீவ் நகரில் உள்ள உளவுத்துறை அலுவலகங்களுக்கு அருகேயுள்ள மக்கள் வெளியேறுமாறு ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, உக்ரைனின் முக்கிய நகரமாக கருதப்படும் கார்கிவ் நகரில், ரஷ்ய விமானப் படைகள் இன்று வான்வழி தாக்குதல் நடத்தின. பொதுமக்கள் இருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன்னதாக இன்று அங்கு நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை உக்ரைனின் அவசர கால சேவை மையம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரம் ரஷ்யாவின் எல்லைக்கு மிக அருகாமையில் இருக்கும் பகுதியாகும். அங்கு பெருமளவில் ரஷ்யப் படைகள் நுழைந்து தாக்குதலை தொடங்கிவிட்டன.
முன்னதாக இன்று உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள கோபுரங்களை ரஷ்யப் படைகள் குண்டு வைத்து தகர்த்தன.