உக்ரைன் அதிபரை மூன்று முறை கொலை செய்ய முயற்சித்த ரஷ்யா! வெளியான திடுக்கிடும் தகவல்
ரஷ்ய துருப்புக்களால் மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) லாவகமாக தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா 9-வது நாளாக தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்த நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன.
இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியை உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது.
உக்ரைன் படைகளின் கடுமையான பதிலடி காரணமாக, தலைநகருக்குள் ரஷ்ய துருப்புக்களால் நுழைய முடியவில்லை. ராணுவத்தினருடன் பொதுமக்களும் சேர்ந்து ரஷ்யப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை செய்ய மூன்று முறை ரஷ்யப் படைப்பிரிவினர் முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது,
ரஷ்யாவின் துணை ராணுவ அமைப்பான 'வேக்னர்' படைப்பிரிவில் உள்ள சில வீரர்களுக்கு பிரத்யேக பயிற்சிகளை அளித்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய ரஷ்ய உளவுத்துறை அனுப்பி வைத்தது. இந்த தகவலை ரஷ்யப் படைகளில் இருக்கும் சில அதிகாரிகளே, உக்ரைன் அரசுக்கு தெரிவித்து விட்டனர்.
இதனால் உக்ரைன் அதிபருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டது. அதேபோல, அவர் தங்கும் இடங்களும் உடனடியாக மாற்றப்பட்டு விட்டன.
இது தெரியாமல், வேக்னர் படையினர் கீவ் நகரில் இருந்த உக்ரைன் அதிபரின் இரகசிய கட்டடத்துக்கு கடந்த சனிக்கிழமை நுழைந்துள்ளனர். இதனை எதிர்பார்த்து காத்திருந்த உக்ரைன் ராணுவத்தினர், அவர்கள் அனைவரையும் சுட்டு கொன்றுவிட்டனர்.
அதேபோல, ரஷ்யாவில் உள்ள கிளர்ச்சி அமைப்பான 'சேச்சான்' படையில் உள்ள சிலரும், உக்ரைன் அதிபரை கொலை செய்ய தலைநகர் கீவ்வுக்கு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள், உக்ரைன் அதிபரை கொலை செய்வதற்காக இரகசிய பாதை வழியாக வந்திருக்கிறார்கள்.
இவர்களின் வருகை குறித்தும் உக்ரைன் ராணுவத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதால், அவர்களையும் எளிதில் அடையாளம் கண்டு உக்ரைன் சிறப்புப் படையினர் கொன்றுவிட்டனர்.
இவ்வாறு மூன்று முறை நடைபெற்ற கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தப்பித்துள்ளார் என அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்யப் படையின் முதல் குறியாக தானும், தனது குடும்பத்தினரும் தான் இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவரை மீட்க அமெரிக்கா முன்வந்த போதிலும், அதனை ஏற்க மறுத்த வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, கடைசி மூச்சு உள்ள வரை ரஷ்யப் படைகளுக்கு எதிராக போராடவுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.