போர் அச்சுறுத்தல்: உக்ரைனில் இருந்து தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா!
போர் அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
இதேவேளை, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்றைய தினம் அங்கீகரித்தது.
உக்ரைனின் பகுதிகளாக உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் நகரங்களில் படைகளை களமிறக்க ரஷ்ய ஜானதிபதி விளாடிமிர் புதின் (Vladimir Putin) உத்தரவிட்டதைத்தொடர்ந்து, அந்த பகுதிகளில் ரஷ்யா தனது படைகளை நிலைநிறுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் போர் அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள ரஷ்ய தூதர்கள் பல அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் அவர்கள் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைனின் கிளர்ச்சிப் பகுதிகளை ரஷ்யா அங்கீகரித்ததைத் தொடர்ந்து, உக்ரைனில் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு அதிபர் விளாடிமிர் புதினுக்கு (Vladimir Putin) அனுமதி வழங்க ரஷ்ய நாடாளுமன்றம் வாக்களித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.