உக்ரைனின் மற்றொரு நகரத்திலுள்ள இராணுவப் பிரிவு மீது ரஷியப் படைகள் தாக்குதல்
ரஷியப் படைகள் மைக்கோலாய்வில் உள்ள இராணுவப் பிரிவு மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் நேற்று 12-வது நாளை எட்டியது. போர் நிறுத்தம் அறிவித்த நகரங்களிலும் பீரங்கி குண்டு வீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன.
இதுதவிர உக்ரைனின் மற்ற நகரங்களையும் ரஷிய படைகள் சுற்றிவளைத்து உக்கிரமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதன்போது ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைக்கிறோம் என கூறி ரஷியா போரை தொடங்கினாலும் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் என ரஷிய படைகளின் தாக்குதல்கள் விரிவடைந்து வருகின்றன.
குடியிருப்பு பகுதிகளில் பொழியும் குண்டு மழையால் அப்பாவி மக்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக உயிருக்கு பயந்து நகரங்களை விட்டு வெளியேறும் முயற்சியின் போது குண்டு வீச்சில் சிக்கி பலியாகும் சோக நிகழ்வுகள் கண்களை கரைய வைக்கின்றன.
இந்நிலையில் ரஷியப் படைகள் மைக்கோலாய்வில் உள்ள இராணுவப் பிரிவு மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மைக்கோலாய்வ் ஒப்லாஸ்ட் கவர்னர் விட்டலி கிம் கருத்துப்படி, “மார்ச் 7 அதிகாலை, ராணுவ வீரர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த போது, ஒரு ஏவுகணை கட்டிடத்தைத் தாக்கியது.
எட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர், எட்டு பேர் காணாமல் போயினர்” என்று தெரிவித்தார். இதன்படி உக்ரைனின் ஆயுதப் படைகளின் தளபதி வலேரி ஜலுஷ்னி கூறுகையில், “உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள், ரஷிய விமானத்தை கிவ் மீது சுட்டு வீழ்த்தின.
அதன்பிறகு, இரவு 9:10 மணிக்கு, மற்றொரு ரஷிய விமானம் நகரின் புறநகரில் நடந்த வான்வழிப் போரில் அழிக்கப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.