உக்ரைன் வீரர்களை பிடித்து சென்ற ரஷ்ய படையினர்!
செர்னொபெல் அணு உலை பகுதியில் இருந்த தங்கள் நாட்டு வீரர்களை ரஷ்ய படையினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைன் - ரஷ்யா இடையே துருக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து படைகளை குறைக்க ரஷ்யா முன்வந்தது.
இதன் தொடர்ச்சியாக செர்னொபெல் அணு உலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரஷ்ய படைகள் தற்போது அங்கிருந்து பின்வாங்கியுள்ளன.
இந்நிலையில், செர்னொபெல் அணு உலையில் இருந்து பின்வாங்கியபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உக்ரைன் பாதுகாப்பு படையினரை ரஷ்ய படையினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 24-ம் திகதி முதல் தங்கள் படையினரை ரஷ்ய படையினர் பிணைக்கைதிகளாக வைத்திருந்ததாகவும், தற்போது படையினரை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டதாகவும் ரஷ்ய படையினர் மீது உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.