அமெரிக்காவில் பெரும் திகைப்பை ஏற்படுத்திய ஊழியரின் சம்பளம் ; காரணம் இதுதான்!
அமெரிக்காவில் ஊழியர் ஒருவருக்கு தள்ளுவண்டியில் சம்பளம் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் திகைப்பையும் சர்ச்சையையும் தோற்றுவித்துள்ளது. அமெரிக்காவின் ஜோர்ஜா மாகாணத்தில் இருக்கும் ஆண்ட்ரியால் ஃப்ளாடென் என்பவர், ஒரு வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
அவர் தன் மேனேஜருடன் முரண்பட்டு வேலையை விட்டு சென்ற நிலையில் , ஆண்ட்ரியாலுக்கு தற்போது கொடுக்கப்பட்ட இறுதி பணத்தால் மிக பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. ‘ஏ.ஓகே. வாக்கர் ஆட்டோ ஒர்க்ஸ்’ என்கிற கடையின் உரிமையாளர் மைல்ஸ் வாக்கர், தன்னிடம் பணிபுரிந்த ஆண்ட்ரியால் ஃப்ளாடென் என்கிற ஊழியருக்குக் கொடுக்க வேண்டிய 915 அமெரிக்க டாலரை, சென்ட்டாக அதாவது 91,500 சென்ட்டாக திருப்பி கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் நாணயம் முழுவதும் கிரீஸ் படிந்து இருப்பதாகவும், கிரீஸ் படிந்திருக்கும் நாணயங்களை, தான் ஒவ்வொரு நாணயமாக சுத்தம் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய நிறுவனத்தின் உரிமையாளர் மைல்ஸ் கூறும் போது, ‘ஃப்ளாடென்னுக்கு நாணயங்களைக் கொடுத்தது நினைவு இல்லை.
ஆனால் அவருக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டோம். அவ்வளவு தான், என சிபிஎஸ் 46 ஊடகத்தின் செய்தியாளர் ஒருவரிடம் கூறினார். இது குறித்துப் பேசிய ஃப்ளாடென், ‘தெற்கு அட்லான்டாவில் பீச்ட்ரீ நகரத்தில் இருக்கும் அந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் தான் நான் மேலாளராக பணிபுரிந்து வந்தேன்.
கடந்த நவம்பர் 2020-ல், வேலையை விட்டு வெளியே வந்தேன். அதன்பின்னர் எனக்கு வந்து சேர வேண்டிய பணம் வராததால், தொழிலாளர் துறையிடம் முறையிட்டு உரிமைத் தொகையைக் கேட்டேன். அதன்பின் அமெரிக்க தொழிலாளர் துறை மூலமாகவே என்னுடைய பணம் எனக்கு கிடைத்தது. அதுவும், நாணய மலையாகக் கிடைத்தது.
அந்த நாணய மலை மீது ஒரு கடிதத்தில் தகாத வார்த்தையில் எழுதப்பட்டு என்னுடைய சம்பள விவரங்கள் இருந்ததாக கூறியுள்ளார். இதேவேளை ஃப்ளாடெனின் அந்த கிரீஸ் படிந்த நாணயங்களை ஒற்றை சக்கரம் கொண்ட தள்ளு வண்டியில் கொண்டு வரும் போது, வண்டியில் இருக்கும் நாணயங்களின் கணத்தால், வண்டியின் சக்கரம் உடைந்து விட்டதாக ஃப்ளாடெனின் தோழி ஒலிவியா ஆக்ஸ்லே தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் தன்னிடம் இருக்கும் நாணயங்களை மொத்தமாக குளிக்கும் தொட்டியில் கொட்டி, தண்ணீர், சோப்பு, வினிகர் என பல வழிகளில் சுத்தம் செய்ய முயன்றதாகவும், ஆனால் எந்த பலன் கிடைக்கவில்லை எனவும் ஃப்ளாடென் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியத்தை இப்படிக் கொடுப்பது தார்மீக ரீதியில் சரியல்ல என இந்த சம்பவம் குறித்து பலர் கூறிவருகின்றனர்.
மேலும் அமெரிக்க தொழிலாளர் துறையைச் சேர்ந்த எரிக் ஆர் லுசெரோ பேசும் போது, ‘ஊழியர்களுக்கு எந்த கரன்சியில் அவர்களுக்கான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை’ என கூறியுள்தாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
