முழு குடும்பத்துக்கும் ஒரே தடுப்பூசி; இந்திய விஞ்ஞானிகள் சாதனை !
சீனாவின் வுகான் நகரத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்றானது இன்றுவரை மக்களை பெரும் அச்சத்தில் வைத்துள்ளது.
கொரோனா வைரஸானது அடுத்தடுத்து உருமாறி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று தொடர்ந்து பரவி வருவது அறிவியல் உலகத்தை அதிரவைத்துள்ளது.
தற்போது வழக்கில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவின் உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக செயல்படுமா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம், அசன்சோல் காஜி நஸ்ருல் பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசா மாநிலம், புவனேசுவரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானிகளும் இணைந்து எல்லா வகை உருமாறிய கொரோனா வைரசுக்கும் ஏற்றவகையில் ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி தடுப்பூசியை உருவாக்கி உள்ள ஆராய்ச்சி விஞ்ஞானிகள் அபிக்யான் சவுத்ரி, சுப்ரபாத் முகர்ஜி, பார்த்தசாரதி சென்குப்தா, சரோஜ்குமார் பாண்டா, மலாய்குமார் ராணா ஆகியோர் கூறியுள்ளதாவது,
எங்களது ஆராய்ச்சியில் ‘எபிடோப் மல்டி டார்கெட் சைமெரிக் பெப்டைட்டை’ வடிவமைக்க நோய் எதிர்ப்பு தகவல் அணுகுமுறையை பயன்படுத்தினோம்.
இது எச்கோவ்-229இ, எச்கோவ்-எச்கு1, எச்கோவ்-ஓசி43, சார்ஸ்-கோவ், மெர்ஸ்-கோவ், சார்ஸ்-கோவ்2 ஆகிய 6 வைரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். தற்போது வடிவமைத்துள்ள தடுப்பூசி மிகவும் நிலையானது.
இது ஆன்டிஜெனிக் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது என்றும், கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அத்துடன் மற்ற தடுப்பூசிகளைப் போல அல்லாமல், டிஎல்ஆர்4 எனப்படும் புரதத்துடன் அதிக பிணைப்பு வலிமையைக் காட்டிய பிறகு அடையாளம் காணப் பட்டவை தேர்ந்தெடுக்கப்பட்டன.
அதே புரதம் உடலில் சார்ஸ் கோவ்-2 வைரஸ்களைக் கண்டறிந்து, நோய் எதிர்ப்பு பதிலளிப்புகளை தொடங்குவதற்கு பொறுப்பாகும்.
இந்த தடுப்பூசி வகையானது ஒரே நேரத்தில் அனைத்து கொரோனா குடும்ப வைரஸ்களையும் சமாளிக்க ஏற்றது எனவும் தெரிவித்த அவர்கள், உலகில் வேறெங்கும் இப்படி ஒரு தடுப்பூசி உருவாக்கப்படவில்லை, எனவும் கூறியுள்ளனர்.