சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை? கனடாவில் புதிய விவாதம் தீவிரம்
கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வது குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்க திட்டமிட்டுள்ளதாக மாகாண முதல்வர் ஸ்கொட் மோ தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அண்மையில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு முழுமையான சமூக ஊடகத் தடை அமல்படுத்தியதை குறிப்பிட்டு, கனடாவும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என அவர் சமூக ஊடகமொன்றில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 4,000-க்கும் மேற்பட்டவர்களில் சுமார் 75% பேர், ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டதுபோன்ற தடை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தத் தடை, டிக்டாக், முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியுப் மற்றும் ஸ்னெப்சாட், போன்ற தளங்களில் 16 வயதிற்குட்பட்டவர்கள் கணக்குகள் உருவாக்குவதைத் தடுக்கிறது.
இதேவேளை, கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இந்த விவகாரம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார்.
எனினும், இது குறித்து விரிவான விவாதம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஆன்லைன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் அவசியம் என்றும், சமூக ஊடகங்களுக்கான “வயது வரம்பு” குறித்த விவாதமும் அதில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.