யார்க் பொலிசாரின் துரித நடவடிக்கை... சிக்கிய 3 இந்திய வம்சாவளி இளைஞர்கள்
80 வயது பெண்மணியை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மூன்று பிராம்ப்டன் இளைஞர்களை யார்க் பிராந்திய பொலிசார் கைது செய்துள்ளனர்.
கனடா வருவாய் நிறுவனம் தொடர்பிலே குறித்த பெண்மணியை இந்த இளைஞர்கள் மூவரும் ஏமாற்றியுள்ளனர். திங்களன்று கனடா வருவாய் நிறுவனம் சார்பில் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய ஒருவர், குறித்த பெண்மணியிடம் 10,000 டொலர் பணம் கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளார். மட்டுமின்றி பணம் அளிக்க தவறினால், கைதாகும் சூழல் ஏற்படும் எனவும் மிரட்டியுள்ளார்.
தலா 5,000 டொலர் என பிராம்ப்டன் முகவரிக்கு அனுப்புமாறு அந்த நபர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதனால் பயந்து போன பெண்மணி பணம் அளிக்க முன்வந்துள்ளார்.
ஆனால் இந்த சம்பவத்தை இடைமறித்த யார்க் பொலிசார், ரகசியமாக கண்காணித்துள்ளனர். சுமார் 1.30 மணியளவில் குறித்த முகவரியில், பணத்தை பெற வந்த நபரை மறைந்திருந்த பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
மட்டுமின்றி, பணத்தை பறிமுதல் செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்ப்பில் விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசாருக்கு, மேலும் இருவர் தொடர்பில் தகவல் கிடைக்கவே, அவர்கள் இருவரையும் உடனடியாக அடையாளம் காணப்பட்டு கைதும் செய்துள்ளனர்.
80 வயது பெண்மணியை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைதாகியுள்ள மூவரும் இந்திய வம்சாவளியினரான 19 வயது தரண்வீர் சிங், 19 வயது ரன்வீர் சிங், 21 வயது சமன்ஜ்யோத் சிங் என பொலிசாரால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் காவலில் உள்ள மூவரும் அடுத்த மாதம் நியூமார்க்கெட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதனிடையே, சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்களைப் பெறும்போது குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிசார் எச்சரித்துள்ளனர்.