கொலம்பியாவில் பாடசாலை பஸ் கோர விபத்து; 17 பேர் உயிரிழப்பு
வடக்கு கொலம்பியாவின் கிராமப்புறப் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்து தொடர்பில் ஆன்டிகுவியா பகுதி ஆளுநர் ஆண்ட்ரெஸ் ஜூலியன் எக்ஸ் தளத்தில், பாடசாலை மாணவர்களின் சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு கரீபியன் நகரமான டோலுவிலிருந்து மெடலினுக்குப் பஸ் பயணித்த போது இந்த விபத்து இடம் பெற்றது.

பட்டமளிப்பு விழாவை கொண்டாடிய மாணவர்கள்
ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்கள் கடற்கரையில் தங்கள் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடினர். டிசம்பர் மாதத்தில் இந்த விபத்து சம்பவம் முழு சமூகத்திற்கும் மிகவும் கடினமான செய்தி" என அவர் தெரிவித்தார்.
உயிர் பிழைத்தவர்களில் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட வீடியோவில், "நான் தூங்கிக் கொண்டிருந்தேன், திடீரென்று அலறல் சத்தம் கேட்டது, அந்த தருணத்திலிருந்து எனக்கு எதுவும் நினைவில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ எக்ஸ் தளத்தில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இளைஞர்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை.
அவர்கள் படிக்கப் போகும்போது அல்லது மகிழ்ச்சியுடன் ஓய்வெடுக்கும்போது கூட உயிரிழப்பதை விரும்பவில்லை என பதிவிட்டுள்ளார்.